கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது மதியத்திற்குள் தெரிந்து விடும்.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்ககளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4 இடங்களும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும்.

 

-mm