உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளும் செய்ய தயார்: பிரதமர் மோடி

போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ரஷியா – உக்ரைன் இடையேயான போர் இன்று 451வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதேவேளை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் போருக்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் இந்தியா உள்பட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கியும் கலந்துகொண்டார். அவர் ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். அதன் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு கடந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மற்றும் தனிப்பட்ட முறையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மோதலை அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

இது மனிதாபிமானம், மனித மதிப்பு தொட்ர்பான பிரச்சினையாக பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நேருக்கு நேர் சந்தித்துள்ளோம். உக்ரைன் போர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகத்திலும் பல்வேறு பாதிப்புகளை போர் ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

 

-dt