கமாண்டோ சீருடையில் தாக்குதல்: கலவர கும்பலுக்கு மணிப்பூர் போலீஸ் எச்சரிக்கை

மணிப்பூரில் கலவரத்தின் போது போலீஸ் கமாண்டோக்களின் சீருடைகள், ஆயுதங்கள் திருடுபோயின. இந்நிலையில் கலவரக்காரர்கள் சிலர் திருடப்பட்ட கமாண்டோக்களின் சீருடையை அணிந்து வன்முறையில் ஈடுபடுவது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனால் கமாண்டோக்களின் கருப்பு நிற சீருடையை மக்கள் யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என மணிப்பூர் போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி கமாண்டோ சீருடையில் செல்பவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதிக்கும் படி பாதுகாப்பு படையினருக்கு மணிப்பூர் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலவர கும்பல் கமாண்டோ சீருடையில் வன்முறையில் ஈடுபடுவதால், பாதுகாப்பு படையினர் பாரபட்சமாக செயல்படுவதாக மணிப்பூர் மக்கள் தவறாக நினைக்கின்றனர்.

கலவரத்தின் போது போலீஸாரின் ஆயுதங்கள் காணாமல் போனது பற்றி தற்போது கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அவற்றை மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலவரத்துக்குப் பின் மணிப்பூர் போலீஸ் படையில் 1,200 பேரை காணவில்லை. அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்று டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

 

 

-th