அமெரிக்காவில் இந்திய மாணவி பலியான விவகாரம்: போலீஸ் அதிகாரியை நீக்க வலியுறுத்தி 6,700 பேர் மனு

அமெரிக்காவில், போலீஸ் ரோந்து வாகனம் இடித்து இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது மணிக்கு 120கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியது. இதில் 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார்.

அவருடன் டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார். விபத்துக்கு பின் சியாட்டில் போலீஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல் இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது மாணவி குறித்தும் அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார். இந்த உரையாடல் போலீஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கேமராவில் பதிவானது.

அந்த, ‘ஆடியோ’ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்தியதுடன், கேலி பேசிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி., க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல், நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள் சங்கம், விபத்து நடந்த போது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகியுள்ளது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் கூறிய கருத்துகள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை என கூறியுள்ளது. இந்நிலையில், டேனியலை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் கையெழுத்திட்ட மனு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

-dt