ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது

இந்தியாவுக்குள், தமிழகம் எப்போதுமே, ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஜப்பான் – இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.5) சென்னை, போரூரில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்தியாவுக்குள், தமிழகம் எப்போதுமே, ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஹிட்டாச்சி உட்பட, எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளார்கள். ஜப்பான் – இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது. அந்த வரிசையில், ஹிட்டாச்சி நிறுவனம் தனது தொழிற்சாலைகளை தமிழக்த்தில் நிறுவி வருவதோடு மட்டுமின்றி, அவற்றை பெருமளவில் விரிவாக்கம் மேற்கொண்டு வருவதும் மகிழ்ச்சி தருகிறது.

சென்னையில் வரவிருக்கும் இதுபோன்ற உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மையங்கள், நமது உள்ளூர் திறன்களுக்கு உலக அளவில் எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ஹிட்டாச்சி எரிசக்தி நிறுவனத்துக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையம் அவர்களின் உள்ளடக்கிய வளர்ச்சி பயணத்துக்கு உறுதுணையாக நின்று, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுத்திட வேண்டும். அதன் மூலம், உங்களின் எதிர்கால திட்டங்களை, தமிழகத்தில் மேலும், மேலும் நிறுவிட வேண்டும் என்றும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

3 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையத்தில், 50,000 சதுர அடியில், சிறப்பு ஆய்வகமும் அமைத்துள்ளது. எரிசக்தித் துறையில், நிபுணத்துவம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட உயர்தர வேலைவாய்ப்புகளை இந்தத் திட்டம் வழங்க உள்ளது.இந்தத் திட்டத்தின் மூலமாக 2500 பேர்களுக்கு உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திட நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள், தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து இந்த மையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி தங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர இருக்கின்றன. அதற்கு முன்னதாகவே ஹிட்டாச்சி நிறுவனம் இந்த தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொதுவாக முதலீடுகளை ஈர்ப்பதற்கு நிறுவனங்களுக்கு – அரசு அழைப்பு விடுப்பது ஒரு நடைமுறை. ஆனால் ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தமிழகத்துடனும், தமிழக அரசுடனும் நெருக்கமான நிறுவனமாக இருக்கின்ற காரணத்தால், அழைப்பு விடுக்கத் தேவையில்லை. உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துதான் முதலீட்டாளர் மாநாட்டை நாங்கள் நடத்தயிருக்கிறோம். உங்களைப் போன்ற பிற ஜப்பானிய தொழில் நிறுவனங்களையும் அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.