இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37% ஆக உயர்வு

நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “நாட்டின் தொழிலாளர் சக்தியின் அளவு குறித்த முதற்கட்ட கணக்கெடுப்பு 6,982 கிராமங்கள், 5,732 நகரங்களில் நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுவாக கிராமப்புறங்களில் 55.5 சதவீத ஆண்களும், 30.5 சதவீத பெண்களும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நகர்ப்புறங்களில் 58.3 சதவீத ஆண்களும், 20.2 சதவீத பெண்களும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். 15 வயது முதல் 29 வரையிலான வயது உடையவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இவர்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 45.9 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 40.7 சதவீதம் பேரும் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

பொதுவாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களை எடுத்துக்கொண்டால் 57.9 சதவீம் பேர் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களில் கிராமப்புற மக்கள் 60.8 சதவீதமாகவும், நகர்ப்புற மக்கள் 50.4 சதவீதமாகவும் உள்ளனர். கிராமப்புறங்களில் 58.8 சதவீத ஆண்களும், 71 சதவீத பெண்களும், நகர்ப்புறங்களில் 39.4 சதவீத ஆண்களும், 40.4 சதவீத பெண்களும் சுயதொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் நிரந்தரப் பணிபுரிபவர்களில் கிராமப்புற ஆண்கள் 14.3 சதவீதமாகவும், கிராமப்புற பெண்கள் 8 சதவீதமாகவும், நகர்ப்புற ஆண்கள் 47.1 சதவீதமாகவும், பெண்கள் 50.8 சதவீதமாகவும் உள்ளனர். தற்காலிக பணிபுரிபவர்களில் கிராமப்புற ஆண்களின் சதவீதம் 26.8 ஆகவும், பெண்களின் சதவீதம் 21 ஆகவும், நகர்ப்புற ஆண்களின் சதவீதம் 13.6 ஆகவும், பெண்களின் சதவீதம் 8.9 ஆகவும் உள்ளது.

பொதுவாக நாட்டில் வேலையில்லாதவர்களின் சதவீதம் 3.2 ஆக உள்ளது. இதில், கிராமப்புறங்களில் ஆண்கள் 2.8 சதவீதத்தினரும், பெண்கள் 1.8 சதவீதத்தினரும், நகர்ப்புறங்களில் ஆண்கள் 4.7 சதவீதத்தினரும், பெண்கள் 7.5 சதவீதத்தினரும் வேலையின்றி இருக்கிறார்கள். 12ம் வகுப்பு வரை அல்லது அதற்கு மேல் படித்தவர்களில் வேலையில்லாமல் உள்ளவர்கள் கிராமப்புறங்களில் 6.6 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 8.4 சதவீதம் பேரும் உள்ளனர். நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.2 சதவீதம் அதிகரித்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

-ht