அரசு ஊழியர்கள் அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்துகொள்ள தடை – அசாம் முதல்வர்

மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்து கொள்ள முடியாது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அசாம் மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்து கொள்ள முடியாது. சில மதங்கள் பலதார திருமணத்தை அங்கீகரிக்கலாம். ஆனாலும், யாராக இருந்தாலும் 2-ம் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், அதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அனுமதி வழங்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அரசுப் பணியாளர்கள் இறக்கும்போது, ஓய்வூதியத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோருகிறார்கள். இதற்கு தீர்வு காண்பது மிகவும் சிக்கலாக உள்ளது. எனவேதான், இந்த உத்தரவு. இது புதிய உத்தரவு அல்ல. ஏற்கெனவே இருப்பதுதான். இதற்கு முன் இது தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. இனி அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அசாம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் வர்மா கடந்த 20-ம் தேதி அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், அரசின் இந்த முடிவு குறித்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பலதார திருமணத்துக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்போவதாக அசாம் அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அப்போது பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “பலதார திருமணத்துக்கு தடை விதிக்கும் மசோதா குறித்து கருத்து கேட்கப்பட்டது. 149 பேரில், 146 பேர் பலதார திருமணத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

இதேபோல், “குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் அசாம் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது 800-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-ht