ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தபோது, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் முதலீடுசெய்ததாக இப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வருமானத்துக்கு மேல் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், தற்போது இவரது கட்சியில் உள்ள எம்.பி.விஜய்சாய் ரெட்டி உட்பட மொத்தம் 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் ஜெகன்மோகனை 2012-ம் ஆண்டு மே மாதம் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர் 16 மாதங்கள் வரை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெகன்மோகன் முதல்வரானார். அதன்பின் விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.

இந்நிலையில், முதல்வருக்குஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா என எதிர்க்கட்சியினர் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் எம்.பி.சாகண்டி ஹரிராம் என்பவர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை பொதுநல வழக்காகஎடுத்துக் கொள்வதாக தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே மற்றும்நீதிபதி என்.வி.ஸ்ராவன் குமார்ஆகியோர் விசாரணைக்கு ஏற்றனர்.மேலும், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சிபிஐ, சிபிஐ நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 

 

-ht