ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த தைவான் அரசு திட்டம்

கிழக்கு ஆசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக ராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு பாராட்டி வருகிறது.

தைவானில் உற்பத்தித் துறை, வேளாண்மை, மீன் பிடித் துறையில் தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு தீர்வு காண இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியமர்த்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா, தைவான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொழிலாளர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே வரும் டிசம்பருக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 13 நாடுகளுடன் இந்தியா சார்பில் தொழிலாளர் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பட்டியலில் தைவானும் விரைவில் இணைய உள்ளது.

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வருவதால் இஸ்ரேலில் பணியாற்றிய வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக இஸ்ரேலில் தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

எனவே சுமார் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா, இஸ்ரேல் அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

 

-ht