இருள் விலக்கி துன்பங்களை நீக்கும் தீப ஒளி: தலைவர்கள் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன் (தெலுங்கானா ஆளுநர்): “இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் மோடியின் ‘சுய சார்பு இந்தியா’ கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்.

கே.எஸ். அழகிரி (தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்): “தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராவணனை வென்று 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பினார். அயோத்தியின் குடிமக்கள் தங்கள் வீடுகளையும் முழு நகரத்தையும் விளக்குகளால் அலங்கரித்தனர். இது தான் தீபாவளி என்ற கதை வட இந்தியாவில் உள்ளது.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): “வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): “அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): “தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் களிந்த திபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திருநாள் நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்): தீப ஒளித்திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் “தீபாவளி” பண்டிகை இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த காலங்களில் கொரானாவின் தாக்கத்தால் உலகம் சிக்குண்டு விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து, பொருளாதார ரீதியில் பெரும் சரிவையும் சந்தித்ததை மறக்க முடியாது.

அன்று நரகாசுரன் அரக்கன் அழிந்ததால் அதை கொண்டாட திபாவளி உருவானது. இன்று கொரோனா அரக்கனை அழித்ததால் சந்தோசமும், நிம்மதியும் திரும்பியுள்ளது. இனிவரும் காலம் அனைவருக்கும் வசந்த காலமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஎர் சார்பாக தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

-ht