உத்தராகண்டில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து

உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டு சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும்விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்றுவருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மீட்பு பணி முடிய 2-3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதால், சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜன் குழாய் வைத்து தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மீட்புப்பணி குறித்து பேசிய உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “இச்சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்தே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

 

 

-ht