டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடும் ஆப்கானிஸ்தான்

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

டெல்லியிலுள்ள தூதரகத்தை மூடுவது தொடர்பாக ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது. இந்த நடவடிக்கை நவ.23-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த செப்.30-ம் தேதி தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதைத் தொடந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிலைப்பாடு மாறி, பணிகளைச் சாதாரணமாக செய்யும் அளவுக்கு நிலைமை இயல்பானதாக மாறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை சிலர் உள் முரண்பாடு மற்றும் தூதர்கள் தாலிபன்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள் என்று முத்திரைக் குத்த முயற்சிக்கலாம். ஆனால் இந்நடவடிக்கை முழுக்க முழுக்க கொள்கைகள் மற்றும் நலன்களின் பரந்த மாற்றங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எங்களின் பணிக்காலம் முழுவதும், இந்தியாவில் உள்ள ஆப்கன் மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் புரிதலுக்கும் தூதரகம் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. வளங்கள் மற்றும் அதிகாரத்தில் வரம்புகள் இருந்த நிலையில் காபூலில் ஒரு நிலையான அரசாங்கம் இல்லாத போதிலும் தூதரகம் அவர்களின் நலன்களுக்காக செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவுடனான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது. அதில், ” ஆழ்ந்த வருத்தத்துடனும், சோகத்துடனும், ஏமாற்றத்துடனும் புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துகிறது” என்று கூறப்பட்டிருந்தது.

 

-ht