நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுக்கோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

அமெரிக்காவின் ‘நியூ ஜெர்சி’ மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர்.

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதாம் பருப்பைக் கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது குருதியில் இருக்கும் குளுக்கோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும்.

அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது. பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

எனவே பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவது தெரியவந்தது.

மேலும், பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாகத் தெரியவந்துள்ளது.