கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்​குளம் உலைக்களம்!

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூடங்​குளம் அனுமின் நிலையத்தைச் சுற்றி முப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது.

கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள். இவர்களை எப்படி மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ளப் போகின்றன என்ற பதற்றம் பரவி வருகிறது!

கூடங்குளத்தில் உண்ணாநோன்பு போராட்டம் இன்றும் 7வது நாளாக நீடிக்கிறது. 7வது நாளாக தொடர்ந்து உண்ணாநோன்பில் ஈடுபட்டு வரும் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்ட உண்ணாநோன்பில் ஈடுபட்டோரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதே சமயம் அணுமின் நிலையத்தில் 6வது நாளாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அணுமின் நிலையத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அணுமின் நிலையத்தை இயக்க முடிவெடுத்ததை தொடர்ந்து கூடங்குளத்தில் 5000 காவல்துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

எந்தவித முற்றுகை போராட்டமும் கூடங்குளம் பகுதியில் நடைபெறாததால் காவல்துறை குவிப்பு தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்தும் சீராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அணுமின் நிலையத்தின் முகப்பில் அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழக சிறப்பு அதிரடிப்படை  காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இடிந்தகரையில் காவல்துறை செல்ல முற்பட்டால் பதற்றம் ஏற்படும் என்று காவல்துறை தயங்குகிறது.