“மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை”; டைம் பத்திரிகை கடுமையாக விமர்சனம்

இந்தியர் பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங், (வயது 79), கடந்த மூன்று ஆண்டுகளாக, மௌனமாகத்தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, ‘டைம்’ பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது.

பொதுவாக, இப்பத்திரிகை வெளியிடும் அட்டைப் படம் தாங்கிய செய்திக்கு, உலக அளவில் அதிக முக்கியத்துவம் உண்டு.

அதில் கூறப்பட்டிருக்கும் விவரம் வருமாறு: சுரங்க ஊழல் போன்றவற்றில், மன்மோகனுக்கு சம்பந்தமுண்டு என, சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால், ஏற்கனவே மன்மோகன் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. ஊழல் அமைச்சர்களை, இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் ஆட்சி யில், ரூபாயின் மதிப்பு குறைந்த விட்டது. பண வீக்கம் அதிகரித்துள்ளது.

சந்தேகம்: பிரணாப் முகர்ஜி இந்திய ஜனாதிபதி வேட்பாளராக உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங், நிதிஅமைச்சர் இலாகாவை கூடுதலாக கவனிக்கிறார். இருப்பினும், இன்றைய சூழ்நிலையில், அவரால் சாதனை படைக்க இயலுமா என்பது, சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவுடன், அதிகாரப் பகிர்வு முறையில், மன்மோகன் சிங் செயல்படுவதால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. டம்மி போல செயல்பட வேண்டிய நிலை உள்ளது. மற்றும் முக்கிய மந்திரிகளை எதிர்த்தும், அவரால் செயல்பட முடியவில்லை. இவர் ஆட்சியில், விலைவாசி உயர்வு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை, வரும் 2014-ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும். இப்போது, சற்று விழிப்படைந்து அவர் செயல்பட்டாலும், அது அதிக பலன் தராது. அதிக வளர்ச்சியை எட்ட, தற்போது அவர் கூறும் தகவல்கள், தாமதமான முடிவுகள். இந்தியாவின் நொறுங்கிப் போன பொருளாதாரம், பிரதமருக்கு கவலை தரும் அம்சம். இவ்வாறு, டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: