ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பா? சர்ச்சைக்குரிய கடிதத்தால் பரபரப்பு!

இந்தியாவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தப் புத்தகம் இந்தியாவின் குஜராத் மாநில அரசால் தடை செய்யப்பட்டது.

இப்போது, காந்திக்கும், கேலன்பேக்குக்கும் இடையே இருந்த கடிதப் போக்குவரத்துக்கள், அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை லண்டனில் இருந்து செயல்படும், சோத்பி ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட இருந்த நிலையில், அந்த சுமார் 50 ஆண்டுகால கடிதப் போக்குவரத்துக்களையும் ஆவணங்களையும் இந்திய அரசு, சோத்பி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் , விலைக்கு வாங்கிவிட்டது.

இந்திய அரசு இந்த ஆவணங்களை சுமார் 1.28 மிலியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறது. இவை டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்படவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த ஆவணங்களை இந்திய அரசு வாங்கியது, இந்த சர்ச்சைக்குரிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் தடுக்கவே செய்யப்பட்டதாக சில செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தக் கருத்து உண்மையானால், அது சரியான ஒரு நடவடிக்கையாக இருக்காது என்கிறார் காந்திய ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜெயபிரகாசம்.

காந்தி தனது வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகம் என்று கூறியிருக்கிறார், அவரது சுயசரிதையான “சத்திய சோதனை”யில், அவர் பிரம்மச்சார்யம், தனது பாலியல் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் என்று கூறிய ஜெயப்பிரகாசம், எனவே இந்தக் கடிதப்போக்குவரத்து, காந்தி குறித்து ஏற்கனவே தெரிந்த விஷயங்களை விட புதிதாக எதையும் சொல்லும் என்று தன்னால் கருத முடியவில்லை என்றார்.

மேலும், இது போன்ற ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பு இருந்தது என்று கூறுவதாலோ அல்லது அது குறித்த விவாதங்களாலோ, அவரது புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசு, இந்த ஆவணங்களை விலைக்கு வாங்கிய நிலையில், அவைகளை பொதுமக்கள் பார்வைக்கும், ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டுக்கும் விடவேண்டும் என்ற கருத்தையும் அவர் ஆதரிப்பதாக்க் கூறினார்.

இந்த மாதிரி விஷயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக இந்திய அரசு இந்த ஏலத்தை தடுத்திருந்தால் அது தவறாக இருக்கும், ஆனால் அது போல நோக்கம் இருப்பதாக தான் கருதவில்லை என்றார் அவர்.

TAGS: