கேலி செய்தவரை அடித்து, உதைத்து; மோட்டார் வண்டிக்கு தீ வைத்த பெண்

அலாகாபாத்: தன்னை அடிக்கடி, கேலி, கிண்டல் செய்த அண்டை வீட்டு வாலிபரை, பலர் முன்னிலையில் அடித்ததோடு, அவரின் மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தினார் இளம்பெண்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி யாதவ், (வயது 22). இவரை, அண்டை வீட்டில் வசிக்கும் வாலிபர் ஒருவர் அடிக்கடி, கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால், அந்த வாலிபர் மீது, ஆர்த்தி மிகுந்த கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில், தங்கள் பகுதியில் உள்ள சந்தைக்கு ஆர்த்தி நேற்று பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போதும் அந்த வாலிபர் அவரை பின்தொடர்ந்து வந்து கேலி, கிண்டல் செய்தார்; அசிங்கமான வார்த்தைகளாலும் விமர்சித்தார்.

இதனால், வெகுண்டெழுந்த ஆர்த்தி, சந்தையில் பலர் முன்னிலையில் அந்த வாலிபரை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார்; காலால் எட்டி உதைத்தார். இதில், பயந்து போன அந்த வாலிபர் தான் ஓட்டி வந்த மோட்டார் வண்டியையும் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

வாலிபரை அடித்த பின்னும் கோபம் அடங்காத ஆர்த்தி, அவர் விட்டுச் சென்ற மோட்டார் வண்டிக்கும் தீ வைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

TAGS: