தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

சென்னை: கச்சதீவுகள் பகுதியில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள், தனுஷ்கோடி, கச்சதீவுகள் பகுதிகளில் மீன்பிடித்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், பிடிக்கப்பட்ட மீன்களை பறித்து கடலில் கொட்டியதாகவும், படகுகளை தாக்கி சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 500க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

முன்னதாக கடந்த 19ம் தேதி நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன் பிடித்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் தமிழக மீனவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி, வலைகளை கிழித்து கடலில் வீசியது குறிப்பிடத்தக்கது.

TAGS: