இணையக் குற்றங்கள் புரிந்தால் குண்டர் சட்டம் பாயும்: தமிழக முதல்வர்

jayalalithaஇணையத்தில் குற்றம்புரிவோரையும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் புதன்கிழமை ( 19.12.12) நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டினை முடித்துவைத்துப் பேசும்போதே இதை அவர் தெரிவித்தார்.

”பொதுவாக குண்டர் சட்டம் என்பது தொடர்ந்து குற்றங்கள் புரிவோரை எதிர்த்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இனி ஒரு முறை குற்றம் புரிந்தால் அது பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்குமானால் அப்போது குண்டர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்போதும், இணையக் குற்றங்கள் நிகழும்போதும் சம்பந்தப்பட்டவர்களை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்ய வழி செய்யும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.

இணையக் குற்றங்கள் என்றால் வங்கிக் கணக்குகள் தனியார் ஆவணங்கள் இவற்றை அனுமதியின்றி மற்றவர் பார்ப்பது அல்லது சட்டத்திற்குப் புறம்பான ஆபாசக் காட்சிகளைக் காண்பது என்று பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஆனால் சில வகை இணைய தளப் பதிவுகளும் கணினிக் குற்றங்களாகவே கருதப்படுகின்றன.

எனினும் இணையக் குற்றங்களுக்கு எளிதில் பிணையில் வரமுடியாத குண்டர்கள் சட்டத்தை பயன்படுத்துவது மிகக் கெடுபிடிப் போக்காகக் கருதப்படும் என்றும், நீதிமன்றங்கள் அத்தகைய அணுகுமுறையினை ஏற்றுக்கொள்ளாது என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

TAGS: