கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?

india_parlimentஇந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுபற்றி விவாதித்து அரசுக்கு சட்ட வரையறை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் வருகிற 27-ம் தேதி கூடுகிறது என்று குழுவின் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மாணவி கற்பழிப்பு பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தபோது, அனைத்து உறுப்பினர்களும், கட்சி வேறுபாடின்றி வருத்தம் தெரிவித்தனர். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் துரிதமான நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான சட்டம் தேவை. அரசியல் மற்றும் நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.”

சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். சாட்சி சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற பாலியல் வழக்குகளின் விசாரணை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யவேண்டும். மேலும் இத்தகைய குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.”

இந்த அம்சங்கள் அனைத்தும் நிலைக்குழு கூட்டத்தில் விவாதித்து இந்திய அரசுக்கு எங்கள் பரிந்துரைகளை அளிப்போம்” என்றார்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றங நிலைக்குழு கூட்டத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

TAGS: