தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகத் தமிழர்கள் எழுச்சி பெறவேண்டும்

TGTE-meeting-klangஉலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் மாலை மணி 4-க்கு ஆரம்பமான ‘தமிழ் தேசியத்தின் இன்றை நிலைப்பாடு’ குறித்த கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சிலாங்கூர் நடவடிக்கை குழு மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடல் நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலிய பிரதிநிதி க. மாணிக்கவாசகர், நாடு கடந்த தமிழீழ அரசின் இந்திய பிரதிநிதி பேராசிரியை சரஸ்வதி, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் கா. திருமுருகன், சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் எல். சேகரன் மற்றும் மலேசியத் தமிழர் பேரவை தலைவர் மருத்துவர் ஐங்கரன் என சுமார் 100 தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

TGTE-meeting-klang-07இக் கலந்துரையாடல் நிகழ்வில் முன்னதாக பேசிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம்: தமிழீழ விடுதலைப் புலிகளை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தை கொண்டு அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றங்களை புரிந்துள்ளது இலங்கை அரசு.

தமிழீழத்திற்காக தமது உள்ளத்தில் மலர்ந்த ஒரு நாட்டின் எதிர்காலத்தை நம்மிடையே அம்மக்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுடைய அந்த இலட்சியத்தை  நிறைவேற்ற போராட வேண்டிய காலத்தின் கட்டயாத்தில் உலகத் தமிழர்களாகிய நாம் இன்று கூடியுள்னோம். அதற்கான புதிய உத்தியாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மலர்ந்துள்ளது.

இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான ஆதரவு தோழமை மையத்தை மலேசியாவில் உருவாக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். இந்த ஆதரவு தோழமை மையம் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டு அதற்கான குழு அமைப்படும் என கா. ஆறுமுகம் கூறினார்.

கா. ஆறுமுகத்தின் உரையின் பின்னர் பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலிய பிரதிநிதி மாணிக்கவாசகர், 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அனைத்துலக சமூத்துடன் தமிழர்கள் தரப்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சித்தபோது, தடை செய்யப்பட்ட இயக்கம் என அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னரே ஜனநாயக ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கபட்டதாக கூறினார்.

TGTE-meeting-klang-03உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான ஓர் அரசியல் அனுசரனை அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட அமைப்பு, ஆயுததாரிகள் என எம்மை புறக்கணித்த அதே அனைத்துலகச் சமூகம், இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை பேசவருமாறு அழைக்கின்றது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலம் உலகத் தமிழர்கள் கொடுத்த அழுத்தம் எனக் கூறிய மாணிக்கவாசகர், தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் பாதுகாப்பு, கௌரவம் என எல்லாமே இருக்கும் என்றார்.

சிங்கள இராணுவம் தமிழ் சமுதாயத்தை அடித்து நொறுக்கி வேரோடு தமிழர்களை அழித்துவிடவேண்டும் என்ற முயற்சிக்கு பின்னாலும் உலக நாடுகள் பல பாசிச வெறி பிடித்த ராஜபக்சேவுடன் இணைந்து தமிழர்களை கூண்டோடு அழித்து விட வேண்டும் என களம் இறங்கியதாக இதன்போது பேசிய, நாடுகடந்த தமிழீழ அரசின் இந்திய பிரதிநிதி சரஸ்வதி கூறினார்.

TGTE-meeting-klang-05இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் நிலை மக்களாக சிங்களவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய சூழ்நிலையாலேயே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பித்தது. அந்த ஆயுதப் போராட்டம் பின்னடைவை எதிர்நோக்கினாலும் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை இன்னும் தொடர்கதையாகி வருவதால், அப்பிரச்னையை உலகளாவிய அளவில் ஓர் அரசியல் தளத்தில் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள காரணத்தாலேயே நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் விவரித்தார்.

இந்நிகழ்வில் கடைசியாக தமிழ் செயற்பாட்டாளர் திருமுருகன் மற்றும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற ஈழத்து திரைப்படத்தை இயக்கிய புகழேந்தி ஆகியோர் உரையாற்றினர்.

திருமுருகன் பேசும்போது, இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஐநா மன்றம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டதாக ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

ஓர் இனப்படுகொலையை தடுக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ள ஐநா மன்றம் இறுக்கட்டப்போரின்போது சரியாக செயல்படாமல்போனதானது இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு அப்பட்டமாக துணைபோயிருப்பதை காட்டுவதாக கூறிய திருமுருகன், தமது குழுவினர் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டபோது, ஐநா மன்றம் இழைத்த தவறுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளதாக கூறினார்.

TGTE-meeting-klang-02இதன்பின்னர் பேசிய இயக்குநர் புகழேந்தி, நாம் இழைத்த துரோகத்தனத்தை மறைப்பதற்காக இன்று மற்றவர்கள் மீது பழி போடுகின்றோம். 70,000 ஆயிரம் தமிழர்களை 7 கோடி தமிழர்கள் அருகில் இருந்தும் காப்பற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு தமக்கு இருப்பதாக கூறிய அவர், பேசிப் பேசி மற்றவர்களை குற்றம் சாட்டி சாட்டி நம்மீது உள்ள களங்கத்தை மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்துவருகிறோம் என்றார்.

2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடாக மாநிலம் பெங்களூரில் இயக்குநர் கணேசன் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் ஈழத்தமிழர்களின் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 35,000 தமிழர்கள் கலந்துகொண்டார்கள். சிந்தித்துப் பாருங்கள் பெங்களூரில் எத்தனை தமிழர்கள் இருப்பார்கள் என்று. ஆனால், சென்னையில் நடைபெற்ற பேரணியில் அதிகபட்சமாக 5000 தமிழர்களுக்கு அதிகமாக திரளமுடியவில்லை; எவருமே தெருவுக்கு வரவில்லை.

TGTE-meeting-klang-06ஒவ்வொரு கல்லூரி விடுதிகளாக சென்று மாணவர்களிடம், அனைவரும் திரண்டு வந்து சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் பேராட்டங்களை நடத்த வேண்டும் என்று கெஞ்சிப் பார்த்தோம். எவனுமே வரவில்லை. மாறாக விஜய் படத்திற்கும், அஜித் படத்துக்கும் சத்தியம் தியேட்டரில் யுத்தம் புரிந்தனர். ஒரு பயலும் வரலில்லை. இந்த மாணவர்களே பச்சைத் தூரோகிகள்.

ஒரே ஒருநாள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து போரை நிறுத்தக்கோரி தெருவில் இறங்கிருந்தால் – சத்தியமாக சொல்கிறேன், இலங்கையில் போர் நின்றிருக்கும் என தனது உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்தார் இயக்குநர் புகழேந்தி.

இவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும், அன்று சொந்த இனம் அழிக்கப்படும்போது வேடிக்கை பார்த்துவிட்டு இன்று வீர வசனம் பேசும் தமிழர்களுக்கு ஒரு சாட்டையடியாகவே அமைந்திருந்தது. (இவரது உரை காணொளியாக விரைவில் பதிவேற்றப்படும்.)

ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என்பதற்கு அப்பால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்காக அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்; இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை அனைத்து தமிழர்களுக்கும் ஏற்படும் என நிகழ்வு ஏற்பாட்டாளரான சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன் இறுதியாக அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

TAGS: