இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது

india_child_abuseஇந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறுகிறது என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு கூறுகிறது.

குறிப்பாக பள்ளிக்கூடங்களிலும், அரசு நடத்தும் சிறார் நல மையங்களிலும் சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழாயிரத்துக்கும் அதிகமான சிறார் பாலியல் துஷ்பிரயோகப் புகார்கள் வருவதாக அது தெரிவித்துள்ளது.

ஆனாலும் புகார்கள் இந்த அளவில் இருந்தாலும் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பாதிக்கப்படும் சிறார்களை காவல்துறையினர் பல நேரங்களில் மோசமாக நடத்துவதாகவும், நோகடித்து விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இருக்கின்ற சட்டங்களை வலிமையாக நடைமுறைப்படுத்தியும், நீதிக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தும் இந்த பிரச்னையை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கேட்டுக்கொண்டுள்ளது.

சில பிள்ளைகள் தைரியமாக தாங்கள் அனுபவித்த பாலியால் துஷ்பிரயோகம் பற்றி வெளியில் சொல்லும்போதும், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் போன்றோர் அவர்களை அலட்சியப்படுத்துவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

ஹியுமன் ரைட்ஸ் வாட்சின் இந்த அறிக்கை தொடர்பில், இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படியான அறிக்கைகள் தொடர்பில் அது கருத்து வெளியிடுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

டில்லியில் கடந்த டிசம்பரில் இளம் பெண் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெருமளவான மக்கள் கொந்தளிப்பு காணப்படுகின்ற ஒரு நேரத்தில் இந்த ஆய்வறிக்கை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: