LTTE தலைவர் பிரபாகரன் படம் : நாம் தமிழர் கட்சி பேரணிக்கு தடை உத்தரவு

naam_tamilar_bannerகடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை வாங்க மறுத்த அக்கட்சியின் பொறுப்பாளர் வீட்டில் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக காவல்துறையில் கடிதம் கொடுத்திருந்தனர். இதுகுறித்து எந்த பதிலும் காவல்துறை அளிக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீமான் இதுகுறித்து சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது தனது கட்சியினருக்கு கடலூர் வருமாறு அழைப்பும்விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரகாகரன் படம் கொண்ட பேனரை அக்கட்சியினர் பயன்படுத்தியதால் தடை விதித்ததாக கூறப்படுகிறது. கடலூர் முழுவதும் பிரபாகரன் படம் பொறித்த பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கடலூரில் நடக்க உள்ளதாக அக்கட்சியினர் சிலர் தெரிவித்துள்ளனர்.

TAGS: