கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஆரம்பம்

india12713aபெரும் எதிர்ப்பையும் பிரச்சினைகளையும் சந்தித்திருந்த தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்துள்ளன.

வெள்ளிக்கிழமை பின்னேரம் இந்த அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்திக்கான இயக்கம் துவங்கியுள்ளது என்றும் அடுத்த ஓரிரு நாட்களில் மின்சார உற்பத்தி மின் விநியோகக் கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்ற ஒரு கட்டத்தை எட்டும் என்று அணுமின் நிலைய அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரியம் என்ற இரசாயனத்தின் மூலம் அணுசக்தி எரிபொருள் உருளைகளை இயக்கி தண்ணீரைக் கொதிக்கவைத்து மின்சார இயந்திரங்களை இயக்கி மின் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

300 மெகாவாட் மின்சாரம் அடுத்த ஓரிரு நாட்களில் உற்பத்தி ஆகும் என்றும், அடுத்த இரண்டு வார கட்டத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்படும் என்றும் தமிழோசையிடம் தகவல் வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நான்கு அமைப்புகள் அணுமின் நிலையத்தில் பரிசோதனைகளை நடத்தி பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கிய பின்னர் அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி பெற்று கூடங்குளத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில்தான் மின் உற்பத்தி நடைபெறுவதாக அவர் உறுதியளித்தார்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படக்கூடாது என்று போராடிவந்த உதயகுமார் தலைமையிலான குழுவினர், மின் உற்பத்தியை எதிர்த்து தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களைச் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. -BBC

TAGS: