மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு

tamil nadu government logoமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை.

இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.

இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

TAGS: