முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

pdk01இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் ம.தி.மு.க., தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் 16.11.2013 கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை – வள்ளுவர் கோட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், காலை 11.30 மணியளவில், முற்றம் இடிப்பைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி ஒருங்கிணைத்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சவுந்திரராசன், மே பதினேழு இயக்க செயல்பாட்டாளர் கார்த்திக், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தியாகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிற்சங்கப் பிரிவுச் செயலாளர் சைதை கு.சிவராமன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.அதியமான், ‘சந்தனக்காடு’ இயக்குநர் வ.கவுதமன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அருண்சோரி, தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்மகன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேகர், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், பாலச்சந்திரன் மாணவர் இயக்க சிபி.இலட்சுமணன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கப் பொறுப்பாளர் எட்வின், இயக்குநர் வ.கவுதமன், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், காலை 11.30 மணியளவில், முற்றம் இடிப்பைக் கண்டித்து, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உள்ளிட்ட ம.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும், மே பதினேழு இயக்க பேராளர் அருள், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும், திரளான ம.தி.மு.க.வினரும் இதில் கலந்து கொண்டனர்.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில், அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை

மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு காலை 10.30 மணிளவில், ம.தி.மு.க. மாநகரச் செயலாளர் மு.பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எம்.பி.சின்னசெல்லம், தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொருளாளர் எம்.ஆர்.மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி – புதியபேட்டை – ரவுண்டானாவில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜி.ஜி.மாதையன் தலைமையேற்றார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையேற்றார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பேருராட்சி மன்றம் எதிரில், தமாலை 5 மணியளவில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.க.மகாதேவன் தலைமையேற்றார்.

நெல்லை

நெல்லை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. சரவணன் தலைமையேற்றார்.

இடிந்தகரை

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்கள், முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பைக் கண்டித்தும், பழ.நெடுமாறன் உள்ளிட்டோரின் கைதைக் கண்டித்தும், லூர்து மாதா கோயில் போராட்டத் திடலில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முனைவர் சு.ப.உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட போராட்டக்குழு உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தொடர் மழை காரணமாக கடலூர், சிதம்பரம், பெண்ணாடம், ஈரோடு ஆகிய பகுதிகளில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள், வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

 

TAGS: