சென்னையில் நாளை தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை: ஜெயலலிதா

jayalalitha2சென்னையில் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெறும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையேற்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு முன்பாக சுமுக சூழலை ஏற்படுத்த இரு நாடுகளின் சிறைகளிலும் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தமிழகச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இலங்கைச் சிறைகளில் இருந்தும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை, 317 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகச் சிறைகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வரும் திங்கள்கிழமை தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜன.27) காலை 10 மணிக்கு நடைபெறும். இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்தி பகுதியில் செயற்கையாக எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்படும்.

முந்தைய இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்டபடி இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம், இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமுகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதிக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகளை தெரிவிக்க வேண்டும்.

முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மீன்பிடி முறைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்வதன் மூலம் பாக்ஜல சந்தி பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்ட கால வாழ்வாதாரத்துக்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலான சாத்தியக் கூறுகளை கண்டறிய வேண்டும்.

இந்த ஐந்து அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்போர் யார்?, யார்?

சென்னை, ஜன. 25: சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழக-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் சார்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்தரவேலு மற்றும் எம்.ஜெகநாதன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த என்.குட்டியாண்டி மற்றும் ஜி.ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜேசுராஜா, யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன் மற்றும் என்.தேவதாஸ்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக எம்.இளங்கோ பங்கேற்கிறார்.

இலங்கை பிரதிநிதிகள்: இலங்கை மீனவர்களின் சார்பாக டி.சதாசிவம், எ.ஜஸ்டின் ஜோய்ஸா, அமல்தாஸ் ஜேசுதாசன் சூசை, என்.பொன்னம்பலம், பி.செந்தில்நாதன், ஜே.எப்.அமிர்தநாதர், டபிள்யு.ஜே.காமிலஸ் பெரைரா, எல்.எஸ்.அருள் ஜெனிபர், கே.டபிள்யு.எம்.பெர்னாண்டோ மற்றும் பி. அந்தோணி முத்து ஆகியோர் மீனவர் பிரதிநிதிகளாக பங்கேற்பார்கள்.

தமிழக அரசின் பார்வையாளர்கள்: மீனவர் பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பார்வையாளர்களாக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், துறையின் செயலாளர் ச.விஜயகுமார், மீன்வளத் துறை இயக்குநர் ச.முனியநாதன், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் க.ரங்கராஜு மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள், கடலோரப் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொள்வர்.

இலங்கை அரசின் பிரதிநிதிகள்: இலங்கை அரசின் சார்பில் மீóன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் எஸ்.சுபசிங்கே, அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தின் ஸ்டேட் கவுன்சிலர் நிவான் பெரீஸ், மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர்கள் டபிள்யு.எஸ்.எல். டிசில்வா, பி.எஸ்.மிரண்டா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்திய அரசின் பிரதிநிதிகள்: இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, துணைச் செயலாளர் மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தமிழக அரசின் ஒப்புதலுக்கு பிறகே செயலாக்கம்

சென்னையில் நடைபெறும் மீனவர் பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட வழக்குக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெறும்.

பேச்சுவார்த்தையின்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

TAGS: