‘தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது –சென்னைத் தீர்மானம்’

tnsrilankafishermentalks

‘பேச்சுவார்த்தைகள் சுமுகம், இனி அரசுகள்தான் முடிவெடுக்கவேண்டும்’–மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள்

 

தமிழக மீனவர்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்கும்வரை, இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தீர்மானங்கள் இன்று இரு தரப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக இலங்கை மீனவர்கள் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் சென்று மீன் பிடிப்பதாகத் தொடர்ந்து இலங்கை மீனவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழக மீனவர்களோ, இலங்கைக் கடற்படையினால் தாங்கள் தாக்கப்படுவதாகவும், சிறைப்பிடிக்கப்படுவதாகவும், தங்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் கூறிவந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகள் மற்றும் இரு தரப்பு அரசாங்கப் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடந்தது.

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் சென்னையில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் “சுமுகமாகவும், பயனுள்ளதாகவும், முன்னேற்றமளிக்கும் வகையிலும் நடைபெற்றது” என்று இரு தரப்பு மீனவர் தலைவர்கள் கூட்ட முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

“தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்பில் மீன் பிடிக்கமாட்டார்கள்”

ஆனால் இந்தக் கூட்ட முடிவுகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த , இலங்கை மீன்வள அமைச்சின் ஆலோசக சபை உறுப்பினர் எஸ்.பி.அந்தோனிமுத்து, கூட்டத்தில் நடந்து சுமார் ஆறு மணி நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.

இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் அந்தோனிமுத்து.

மேலும் அவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் இலங்கைக்கு வந்து இது குறித்த பேச்சு வார்த்தைகளைத் தொடர உள்ள நிலையில், அது வரை,இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிப்பதையும், இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட ட்ராலர் போன்ற படகுகளையோ அல்லது சர்ச்சைக்குரிய இழுவை வலை போன்ற உபகரணங்களையோ பயன்படுத்துவதையும் நிறுத்துமாறும் இரு நாட்டு அரசுகளுக்கும் அறிவுறுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

தமிழக மீனவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைகள் குறித்த தேதி இரு நாட்டு அரசுகளாலும் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஆனால் இந்தத் தீர்மானம் குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மீனவர்கள் பிரதிநிதிகள் கருத்து எதையும் நம்மால் பெற முடியவில்லை. தமிழக அரசின் கருத்துக்களும் உடனடியாகத் தெரியவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதாகக் கூறப்பட்டு அதன் தொடர்பாக அவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளிடையே தீர்வை எட்ட இன்று சென்னையில் காலை 10 மணியிலிருந்து பேச்சு வார்த்தைகள் நடந்தன.

தமிழகத் தரப்பில் மீன்வளத்துறை அமைச்சர் தனபால், மீன்வளத்துறை செயலர் எஸ்.விஜயக்குமார், மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் முனியநாதன், தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையிலிருந்து இலங்கை மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான அதிகாரிகள் உட்பட 18 பேர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

இந்திய இலங்கை மீனவர்கள் 

இந்திய இலங்கை மீனவர்கள்

 

முன்னதாக, பேச்சுவார்த்தைகளின் முடிவில், மாலையில், செய்தியாளர்களிடையே, சிறிது நேரம் பேசிய மீனவர் சங்கப் பிரதிதிகள் அருளானந்தம் ( தமிழகம்) மற்றும் சதாசிவம் ( இலங்கை) ஆகியோர்,”இந்தக் கூட்டத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்டன, மனம் விட்டுப்பேசினோம்”, என்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக முதல்வருக்கும், இரு நாட்டு அரசுகளுக்கும் தெரிவித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர், செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

மீன் பிடிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இரு தரப்பிலும், எல்லை தாண்டி மீன்பிடிப்பது உள்ளிட்ட சில தடைகள் உள்ளன. அவற்றையும் விவாதித்து, அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் அருளானந்தம்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், சிறைப்பிடிப்பதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். -BBC

TAGS: