அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

C03DGURUஇந்தியா வலிமை பெற அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

சென்னையிலுள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கல்லூரியில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடைபெற்ற “இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான காரணிகள்’ என்ற தலைப்பிலான தேசிய மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்று சுதர்சன நாச்சியப்பன் பேசியது:

இந்தியா இப்போதும் வலிமையான பொருளாதாரத்தையே கொண்டிருக்கிறது. உலக நாடுகள் எவற்றிலும் இல்லாத அளவுக்கு மிக அதிக மதிப்புடைய சொத்துகளை இந்தியா கொண்டுள்ளது.

மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்த அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது தங்கள் நாடுகளில் உள்ள சொத்து மதிப்புகளை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்தியா ஆரம்பம் காலம் முதலே சிறந்த வங்கி நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதோடு, தனி நபர் சேமிப்பு கலாசாரத்தை இந்தியா கொண்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால், மிக அதிக பண இருப்பையும், சொத்து மதிப்பையும் நமது பொதுத் துறை வங்கிகள் பெற்றுள்ளன.

அதே நேரம், ரியல் எஸ்டேட் துறையில் மதிப்பு கூடுகின்றபோது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாகக் காண்பித்து நமது வலிமையை நாமே குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவைப் பொருத்தவரை கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்ததற்கு, ரியல் எஸ்டேட் பொருளாதாரத்தை சரியான முறையில் வெளிப்படுத்தியதே முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும், அறிவுசார் சொத்துக்கள் மூலம் தனது பொருளாதாரத்தை அமெரிக்கா வலிமைப்படுத்தி வருகிறது. உதாரணமாக, ஆப்பிள் செல்போன் விலை ரூ. 25,000 என்றால், அதை வெறும் ரூ. 2,000 செலவில் சீனாவில் உருவாக்கி அமெரிக்கா லாபமடைந்து வருகிறது. இதற்கு அவர்களிடமுள்ள அறிவுசார் சொத்துக்களே காரணம்.

ஒரு செல்போன் மூலம் அமெரிக்கா இந்த அளவுக்கு லாபமடைகிறது என்றால், அது இந்தியாவுக்கும் சாத்தியம்தான்.

ஆனால், இங்குள்ள அறிவாளிகள் அனைவரையும் அமெரிக்கா ஈர்த்து வருகிறது. 15 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்கா குடியுரிமை வழங்கியிருக்கிறது. இது இங்குள்ள இளைஞர்களை மேலும் கவரும் திட்டமே.

இந்தியா வலிமைபெற, அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட்டு இங்கேயே ஆராய்ச்சி மற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர் (தமிழகம் மற்றும் புதுவை) எஸ். ரவி பேசும்போது, கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட  ரூபாய் மதிப்பு திடீர் சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதை நிலைமையைச் சமாளிக்க சிறந்த பணப் புழக்க நடைமுறையை ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. எனவே, விரைவில் நிலைமை சீரடைய வாய்ப்பு உள்ளது.

முதலீட்டாளர்கள் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை.

மேலும், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் நேர்மறையான விளைவுகளையும் இந்த ரூபாய் மதிப்பு சரிவு ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

TAGS: