பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

narendra_modizபுதுடெல்லி, மே. 30–

குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாடமாக சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை மாநில கல்வி மந்திரி புபேந்திரசிங் சுடாசமா தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் மோடி வாழ்க்கை வரலாறு அனைத்து ஆரம்ப பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்படும்.

அவரது பிறப்பு மற்றும் இளமைக் காலத்தில் அவரது குடும்ப சூழ்நிலை, பள்ளி நாட்கள், வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் அவரது போராட்டங்கள், வாழ்க்கை தரம், நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைதல் வரை இடம் பெற்று இருக்கும் என்று அவர் கூறினார்.

இதே போல் மத்தி பிரதேச மாநிலத்திலும் மோடி வாழ்க்கை வரலாறு பள்ளிகளில் பாடமாக இடம் பெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே தனது வாழ்க்கை வரலாறை பள்ளிகளில் பாடமாக சேர்க்க வேண்டாம் என்று குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் எனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதை பார்த்தேன். எனது வாழ்க்கையே போராட்டம்.

அது மாணவர்களுக்கு பாடமாகாது. இந்தியாவுக்கு ஏராளமான வரலாறுகள் உண்டு. தியாகசீலர்கள் பலர் இந்தியாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றிய வரலாறுகள் தான் இளைஞர்களிடம் போய்ச் சேரவேண்டும். மேலும், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வரலாறும், தனிப்பட்டவர்களின் வரலாறும் பாடம் ஆகாது என்பது எனது உறுதியான கருத்து எனவே அதை பாடமாக சேர்க்க வேண்டாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

TAGS: