எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்! விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவிப்பு

indian_fishermansஎங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள்.

கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களையும், படகு பழுதாகி கடலில் தத்தளித்த நான்கு தமிழக மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்ச நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர். அங்கு மீனவர் சங்கத்தினர் அவர்களை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் விடுதலையாகி வந்த மீனவர்களில் சிலர் கூறியதாவது:-

நாங்கள் அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக் கூறி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது, இலங்கை மீனவர்கள் தான், இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் எங்களிடம் கூறினர்.

இதன் மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள் தான் காரணம் என்பது தெளிவாகிறது.

சிறையில் இருந்த போது இலங்கை மீனவ பிரதிநிதிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள் எங்களிடம் இலங்கை கடல் பகுதிக்குள் தடைசெய்யப்பட்ட இழு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

TAGS: