உளவாளி அருண் விமான தாக்குதலுக்கு திட்டமிட்டான்?: விமான பயிற்சி பெற்றது அம்பலம்

arunபாகிஸ்தான் உளவாளியாக மட்டுமல்லாமல், நாளடைவில் அருணே ஒரு பெரிய தீவிரவாதியாக மாற வாய்ப்பு உருவானதாக கருதப்படுகிறது. அவனது செயல்பாடுகளும் இதை உறுதிபடுத்துகின்றன.

சமீபத்தில் அவன் சென்னையில் விமானம் ஓட்ட பயிற்சி பெறுவதற்கு தன் பெயரை பதிவு செய்து இருந்தான். ஓரிரு முறை அவன் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றதும் தெரிய வந்துள்ளது.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ. உத்தரவின் பேரில்தான் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்ததாக கூறினான். எனவே அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போல ஒரு பெரிய சதி திட்டத்துக்கு எதிர்காலத்தில் அருணை பயன்படுத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருக்க லாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை விமானத்தை கடத்தி கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். விமானம் ஓட்ட பயிற்சியில் சேர அவன் கொடுத்திருந்த சான்றிதழ்களை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக தயாரித்து கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அருண் செல்வராஜன் இது போன்று வேறு என்னென்ன சதி செயல்களில் ஈடுபட்டான் என்று விசாரணை நடந்து வருகிறது. அதில் அருணுக்கு உதவும் வகையில் சென்னையிலும், கொழும்பிலும் சில கூட்டாளிகள் இருப்பது தெரிய வந்தது. அவர்களும் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்தான்.

அந்த கூட்டாளிகளையும் பிடிக்க அதிகாரிகள் வியூகம் வகுத்துள்ளனர். இதற்கிடையே இந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து சென்னையில் உள்ள முக்கிய நிலைகளுக்கு அருண் பல தடவை சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

சில இடங்களில் அருணும், அவன் கூட்டாளிகளும் நாச வேலைக்கான ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது. இது ஐ.எஸ்.ஐ. தாக்குதலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. எனவே அவன் சென்று வந்த இடங்களை தேசிய விசாரணை குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே மொரா தாபாத் வங்கியில் எடுத்த ரூ.2 கோடி பணத்தை இந்த ஒத்திகை நடவடிக்கைகளுக்கு அருண் செலவு செய்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அருண் வீட்டில் கைப்பற்றப்பட்ட 12–க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து 2009–ம் ஆண்டில் அருண் பணம் பெற்று வந்துள்ளான். இது வரை ரூ.50 கோடிக்கு மேல் அவன் ஐ.எஸ்.ஐ.யிடம் வாங்கி இருப்பான் என்று கூறப்படுகிறது.

அருண் மீது மொத்தம் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அவனை 10 நாள் காவலில் எடுக்க தேசிய புலனாய்வு குழு மனு செய்துள்ளது. மீண்டும் விசாரணை நடத்தப்படும்போது அவனிடம் இருந்து பல புதிய உண்மைகள், திடுக்கிடும் தகவல்களாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டை குறி வைத்துள்ள ஐ.எஸ்.ஐ. மற்றும் தீவிரவாதிகளின் புதிய செயல்பாடுகள் பற்றியும், அருண் போல அப்பாவி வேடத்தில் உள்ள உளவாளிகள் பற்றியும் தெரிய வரலாம்.

TAGS: