ஜெயலலிதாவுக்காக 100 பேர் உயிர் தியாகம் செய்தார்களா? எழுப்பப்படும் சந்தேகங்கள்!

jeya-jailசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர் அ.தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் சொல்லும் 100, 150 என்பது எல்லாம் பலியான உயிர்களின் எண்ணிக்கை என்பதுதான் சோகம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த போராட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதாக சொல்லி வரும் அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாலும், ஜாமீன் தராமல் இழுத்தடிப்பதாலும் இதுவரை உயிர் தியாகம் செய்தோரின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டதாகவும், 150ஐ எட்டிவிட்டதாகவும் அ.தி.மு.க.வே அறிவிப்பு வெளியிட்டு வருவதுதான் உச்சம்.

ஜெயலலிதாவின் செல்வாக்கு இன்னும் சரிந்து விடவில்லை என்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. ஆதரவு ஊடகங்களும் 100 பேர் உயிர் தியாகம் எனும் செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

இந்த பிரசாரம் மோசடியானது என சில ஆதாரங்களுடன் தனது ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார் தி.மு.க தொண்டர் அணி மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி.

பணத்தை காட்டி பிணங்களை விலை பேசும் வில்லாதி வில்லன்கள்” என்ற தலைப்பில் முகப்புத்தகத்தில் அவர் எழுதிய பதிவு, அரசியலில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உமாபதி தெரிவிக்கையில்,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக போராட்டங்களை தூண்டி விடுவது என்பது ஒரு பக்கம் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பலர் உயிர் தியாகம் செய்ததாக அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

இதுவரை உயிர் தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது என எல்லா விவாதங்களிலும், கூட்டங்களிலும் நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

அக்கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வரும் ஆவடி குமார், தொடர்ச்சியாக இதை தெரிவித்து வருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இது தொடர்பாக அ.தி.மு.க.வின் நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் ஊர், பெயர்களை பட்டியலிட்டு செய்தி வெளியானது.

இவை எல்லாம் போலி என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து விசாரித்தோம். விசாரித்த போது தான், அவர்கள் இறந்ததற்கும், ஜெயலலிதா சிறைக்கு போனதற்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரியவந்தது.

யாரெல்லாம் அன்றைய தினத்தில் இறந்தார்களோ அவர்களை எல்லாம் அ.தி.மு.க.வினரை போலவும், அவர்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்காக இறந்தது போலவும் போலி கணக்கு காட்டுகின்றனர்.

இவர்கள் குறிப்பிட்டவர்களில் ஒருவர் தி.மு.க. பிரமுகர். கோவையைச் சேர்ந்த அவர், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை மகிழ்ச்சி பொங்க வரவேற்றவர்.

அதனாலே அ.தி.மு.க.வினரின் தாக்குதலுக்குள்ளானவர். வீட்டுக்கு சென்றவர் இறந்து விடுகிறார். இவரையும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இறந்தவர் என கணக்கில் கொண்டு வந்ததுதான் உச்சகட்ட கொடுமை.

வேதாரண்யத்தில் இறந்ததாக இவர்கள் கூறும் ஒருவர், இறந்தது தீர்ப்பு கூறும் நாளான காலை 7.30 மணிக்கு. அந்த நேரத்தில் ஜெயலலிதா பெங்களூருக்கு கூட புறப்படவில்லை. இதேபோல் தேனியிலும் காலை 8 மணிக்கு இறந்தவரை ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் இறந்ததாக கணக்கு காட்டியுள்ளனர்.

அ.தி.மு.க.வினர் சொல்லும் பட்டியலில் தீராத நோயால் இறந்தவர்கள், குடிப்பழக்கத்தால் இறந்தவர்கள் தான் மிக பெரும்பாலானோர். அப்புறம் ஏன் ஜெயலலிதாவுக்காக இறந்ததாக சொன்னீர்கள் என விசாரித்தோம்.

ஜெயலலிதாவுக்காக இறந்ததாக சொன்னால் 5 லட்ச ரூபாய் வரை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். வருகிற பணத்தை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும்? போனவர் போய்விட்டார். இந்த தொகை குடும்ப தேவைக்கு பயன்படுமே என்றுதான் அப்படி சொன்னோம்” என்றனர்.

இதையெல்லாம் வெளியில் சொல்லி எங்களுக்கு கிடைக்கிற பணத்தை கெடுத்து விடாதீர்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். அதனால்தான் பெயரை வெளியிடாமல் சொல்லி இருக்கிறேன். என்னை சீண்டினால் பெயர் விவரத்தோடு பட்டியல் வெளியிடவும் தயங்க மாட்டேன்.

நல்ல வேளை. தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இறந்து போனார். இல்லாவிட்டால் அவரையும் கூட இந்த கணக்கில் சேர்த்திருப்பார்கள் அ.தி.மு.க.வினர்” என சொல்லி முடித்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார் தெரிவித்ததாவது,

இது உணர்வு பூர்வமாக நடந்த உயிர் தியாகங்கள். இந்த உயிரிழப்புகளை நாங்கள் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் அம்மா மீதான அன்பு மிகுதியால் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மொழிப்போர் தியாகிகளின் உயிர் தியாகத்தை காங்கிரஸ் அரசு இப்படித்தான் சொன்னது. அதன் பின்னர் காங்கிரஸ் தமிழகத்தில் காலூன்றவே இல்லை.

அது போல இந்த உயிர் தியாகங்களை கொச்சைப்படுத்தும் தி.மு.க.வுக்கும் அதே நிலை தான் ஏற்படும். இதையெல்லாம் கொச்சைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல,” என்றார்.

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

TAGS: