முல்லைப் பெரியாறில் கேரளத்தின் அராஜக செயல்! வைகோ கண்டனம்!

mullaiperiyarமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசுக்கு சட்டப்பூர்வமான அதிகாரமும், உரிமையும் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை உள்ளிட்ட பகுதிகளை பராமரிப்பு செய்து மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலோடு முல்லைப் பெரியாறில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீர் மட்டம் 142 அடியை எட்டும் நேரத்தில் தமிழக அதிகாரியை, கேரள அதிகாரிகளும், காவல்துறையினரும் தாக்கினர்.

கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை கண்காணிக்கும் கடமையைச் செய்ய தமிழக அதிகாரிகள் சென்றபோது அணைக்கு செல்லவிடாமல் கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர். ஏற்கனவே அணைப் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.

டிசம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறியாளர்களை தடுத்தது மட்டுமல்ல, மத்திய அரசின் தேசிய பாதுகாப்புப் படையினரையும் செல்லவிடாமல் கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர். கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆய்வு செய்ய முடியாமல் போயிற்று.

2006 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசின் உளவுத்துறை (IB) முல்லைப் பெரியாறு அணைக்கு வன்முறையாளர்களால் ஆபத்து நேரலாம் என்றும், எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலிஸ் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

அணை கட்டப்பட்ட நாளில் இருந்து 1968 ஆம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தமிழக காவல்துறையின் வசமே இருந்தது. அதன் பின்னர் கேரள அரசின் போலிஸ் வசம் தமிழகம் தானாக ஒப்படைத்தது. முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படுத்த கேரளத்தின் சில சக்திகள் முயன்று வருகின்றன.

எனவே முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக அணையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலிஸ் வசம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: