தொப்புள்கொடி உறவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உண்மையாக்குவோம்: ச.ச.முத்து

methen_tamilnadu_001ஓரிரு நாட்களுக்கு முன்னர் உலகத்தமிழ் பெண்கள் பேரவை என்ற அமைப்பு ஒரு அறிக்கை ஒன்றை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்கள். படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதே நேரம் அட இந்த பிரச்சினையை பற்றி தெரிந்திருந்தும் வெளிப்படுத்த இவ்வளவு நாள் தவறிவிட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது.

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் காவிரிபடுகை எங்கும் தோண்டி ஆழமாக துளையிட்டு கோடிக்கணக்கான கனஅடி மீதேன்வாயுவை எடுக்கும் ஒருவகையான குரூரமான நடவடிக்கை பற்றி எழுதி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் என்ற கோடிக்கணக்காண குரலை இதற்கு எதிராக எழுப்பவேண்டும் என்றும் கோரி இருந்தது.

புலம்பெயர் தேசங்களில் அரசியல் மற்றும் விடுதலை வேலை செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக நல்ல தகவல்களை அந்த உலக தமிழ் பெண்கள் அமைப்பின் அறிக்கை உட்கொண்டிருந்தது.

தமிழீழ தாயகத்தின் விடுதலை என்பது உலகின் வேறு எந்த சக்தியாலும் கிடைக்கப் போவது இல்லை. உலக இயக்கத்தினை நிர்ணயிக்கும் சக்திகள் ஆட்சி மாற்றங்களையும், நடைபெற்ற  இன அழிப்புக்கான நீதியையும் பெற்றுத்தர ஓரளவுக்கு முயலலாம்,அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.

ஆனால் முழுமையான விடுதலை அல்லது சுதந்திரதாயக மலர்வு என்பதை உருவாக்க கூடிய மாபெரும் சக்தி உலகம் முழுதும் பரந்து நிற்கும் தமிழர் என்ற சக்தியே ஆகும்.

அதிலும் தமிழ்நாட்டின் இளைய- மாணவ சக்தியின் தலைமையில் ஒரு எழுச்சி உருவானால் அதுவே எமக்கான நிரந்தர விடியலை விரைவுபடுத்தும் என்பதே நடந்த காலங்களில் கண்டுகொண்ட பேருண்மை ஆகும்.

சரி இனி இந்த மீதேன்வாயு திட்டத்துக்கு கொஞ்சம் வருவோம்.

பூமி முழுதும் அகன்று தோண்டினால் ஏதாவது கனிமங்களும், எரிவாயுக்களும் இன்னும் அறியப்படாத பெரும் சக்திமூலங்களும் கிடைக்கும்.

பலகோடி ஆண்டுகளின் பெருமழை மற்றும் புவி மாற்றங்கள் மண்ணின் ஆழத்துள் ஏராளம் பொருட்களை கொண்டு சென்று இரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியதால் அவையெல்லாம் இப்போது கனிமங்களாக பெரும் சக்தி மூலங்களாக மாறி நீக்கமற நிலத்தினுள் எங்கெங்கும் இருக்கின்றன.

இப்போது நீங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழேயோ அல்லது வீடுகளின்கீழே பலஆயிரம் ஆழத்துள் ஏதாவது கனிமம் இருக்கவே இருக்கும். அதற்காக வீட்டையே இடித்துவிட்டு யாராவது பூமியை தோண்டி கனிம வாயுவை எடுக்கப் போகின்றோம் என்றால் மனிதர் வாழ்வதற்கு நிலமே கிடைக்காது.

அதுதான் இப்போது தமிழ் நாட்டின் காவரிப் படுகை எங்கும் நடக்கின்றது. நிலத்தினுள் பல ஆயிரம் அடி ஆழத்துள் இருக்கும் நிலக்கரிப்பாறை இடுக்குகளில் நிறைந்திருக்கும் மீதேன் வாயுவுக்காக ஒருகோடிக்கும் அதிகமான மக்களை நேரடியாகவும் முழுத் தமிழ்நாட்டையும் பொதுவாகவும் பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கி அழிக்கும் இந்த செயலின் பிண்ணணியில் மத்திய அரசு மிக முனைப்பாக இருக்கிறது.

காங்கிரஸ் அரசின் காலத்திலேயே இந்த திட்டத்துக்கு மத்திய பெற்றோலிய எரிபொருள் கழகம் ஒப்புதல் அளித்திருந்தாலும் இப்போதைய மோடி தலைமையிலான அரசும்கூட அதனை தொடர்வதிலேயே முனைப்பும் வேகமும் காட்டுகிறது.

ஏறத்தாள ஒருலட்சம் ஆயிரம் கனஅடி மீதேன் வாயுவை எடுப்பதற்கான ஒப்பதம் செய்துள்ள நிறுவனமான த கிரேட் எனர்ஜி கோப்பரேசனின் தலைவர் யோகேந்திரகுமார் மோடி தற்போதைய பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதும் வேறு காரணங்கள் பல இருந்தாலும்கூட தமிழர்கள் என்றால் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இளக்காரமே முக்கிய காரணமாகும்.

தமிழர்களின் வாழ்விடங்களை நீர்வற்றிய, மரங்கள் அழிந்த பாலைவனங்களாக்கி அவர்களின் உயிர்வாழ்தலுக்கான அனைத்து சாத்தியங்களையும் இல்லாது ஆக்கும் கொடிய விளைவுகள் நிறைந்தது இத்திட்டம்.

துளையிடப்பட்டு உருவாக்கப்படும் ஒவ்வொரு கிணற்றில் ஆயிரக்கண்கான அடி ஆழத்துள் இருக்கும் பாறை இடுக்குகளில் மிகமிக அதிக அழுத்தத்துடன் இரசாயன கலவையை செலுத்தி அதன்மூலமே இந்த மீதேன்வாயு எடுக்கப்படும்.

ஒருமுறை இப்படி இரசாயன கரைசலை தயாரிக்க 5கோடி 67லட்சத்து 33ஆயிரத்து 650லிட்டர் தண்ணீரும், 140தொன் மணலும் 280தொண் இரசாயன கலவையும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு கிணற்றுக்கு..இரண்டாயிரம் கிணற்றுக்கும்…..?

தொன்கணக்கில் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்படும் இந்த இரசாயன கரைசலில் பென்சீன், டொலுவீன், ஈயம், நைட்ரோகுளோரிக் அசிட், ஈதைல், யுரேனியம், மெத்தனால், ரேடியம் போன்ற அறுநூறு இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றால் பெரும் அளவில் புற்றுநோய் தோன்றும் அபாயம் இந்த திட்டத்தின் மிகப்பெரும் எச்சரிக்கைமணி.

இந்த கரைசலை உருவாக்க தேவையான மணலை எடுப்பதற்கு தமிழ்நாட்டின் இனைத்து நதிகளும் தோண்டப்படும். வைகை, தாமிரபரணி, முல்பெரியாறு என்று அனைத்தும் சுரண்டி எடுக்கப்படும்.

இது ஒரு மிகப்பெரும் அபாயம் தமிழ் இனத்துக்கு.

இன்னுமொன்று,தஞ்சை பெரியகோவிலின் அருகிலும் அதன் சுற்று வட்டாரங்களான ஒரத்த நாடு பகுதியிலும் இப்படி ஐயாயிரம், ஆறாயிரம் அடிகளுக்கு நிலத்தை துளையிடுவதால் தமிழர்களின் வரலாற்றை சொல்லும் கங்கை கொண்ட சோழபுரமும், தஞ்சைப் பெரியகோவிலும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.

ஒரே நேரத்தில் தமிழர்களின் உயிர்வாழ்வு, பராம்பரிய வரலாற்று நினைவிடம் என்ற இரண்டிலும் பெரும் பாதிப்புகளை, அழிவுகளை உருவாக்கும் இந்த திட்டத்தின் பின்னே பெரிய அரசியல் சதிகளும் உள்ளன.

2013ல் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ‘விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறுவேலைகளுக்கு செல்வதை பற்றி சந்திக்க வேண்டும் என்று சொன்னது இதற்கான முன் ஒத்திகைதான்.

காவரி நதி நீர்ப் பிரச்சினையை இழுத்தடித்து நீடித்தால் நீர் போதியதாக வரத்து இல்லாமல் விவசாயிகள் வேறு தொழில்களுக்கும் வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள்.

தன்போது அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி இந்த கொடிதிட்டத்தை நடாத்தும் எண்ணத்தாலேயே மத்திய அரசு கன்னட அரசை வற்புறுத்தாமலேயே இருந்தும் வருகிறது.

வேதாரணம் கடல் முதல் மன்னாற் கடல்பாறைகளுக்குள் நிரம்பி வழியும் சக்தி மூலங்களை எந்தவொரு எதிர்ப்புமின்றி கொள்ளை அடிக்கும் எண்ணமும் இந்தியா ஈழத்து இனப்படுகொலையில் பங்குதாரராக நின்றதற்கான காரணங்களில் ஒன்று.

இப்படியாக பல அபாயங்களை பாதிப்புகளை அழிவுகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தை தனித்து நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தின் தோ,ராஜமன்னர்குடி முதல் பாகூர் வரையிலான பகுதி மக்களது பிரச்சினை என்று நினைக்காமல் அனைவரும் குரல் கொடுத்தே தீர வேண்டும்.

இப்படியான வாழ்வாதார பிரச்சனைகளின்போது அந்த மக்களுடன் நிறபதன்மூலமே உண்மையான சகோர உணர்வை, ஒன்றிணைவை உருவாக்க முடியும். அவர்கள் வாழ்வுக்காக போராடும்போது அவர்களுடன் கைகோத்து நிற்காமல் அதன்பிறகு அவர்கள் திரண்டுவந்து எமது விடுதலைப் போராட்ட குரலுக்கு ஆதரவு தரவேண்டும் என நினைப்பது எத்தனை பேதமை.

ஒரு சிறு தீக்குச்சியை எரியவைத்து இருளின் அடர்ந்த கருமைக்குள் ஒளியேற்றி காட்டி உள்ளது உரக தமிழ் பெண்கள் அமைப்பு.வெறுமனே மேசைகளில் அமர்ந்து ராஜதந்திரமும், அதற்கு உதாரணமாக குட்டிக்கதைகளும் கூறிக் கொண்டிருக்காமல் அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

காலத்தின் பெருந்தேவை இது.செய்வோமா?

ச.ச.முத்து
[email protected]

TAGS: