கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும். வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காக மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன்.இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் வரும் 18-ஆம் தேதி தில்லி வருகிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக விவாதிக்கும்.

பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்டுள்ள திருவள்ளுவர் திருப்பயணம் குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழும், திருவள்ளுவரும் குறிப்பிட்ட கட்சியோ, குடும்பமோ சொந்தம் கொண்டாட முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

-http://www.dinamani.com

TAGS: