இனப் படுகொலை: இலங்கையை தப்ப வைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்

ramadasஇலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம், இலங்கையின் ஒத்துழைப்பின்மையும் மீறி பன்னாட்டு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, விரிவான விசாரணை அறிக்கையும் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி  இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாற்றுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை வெளியானால், உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இலங்கை அம்பலப்பட்டு நிற்கப்போவது உறுதி. எனவே, இதைத் தடுக்கும் நோக்குடன் இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை  ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் தாக்கல் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போடும் செயல்களில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஆதரவைத் திரட்டி வரும் அவர்,  அடுத்த வாரம் தில்லி வரும் போது இந்தியாவின் ஆதரவையும் கேட்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தொடர்ச்சியாக தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவும் இப்போது இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்கு அக்கறையில்லை. சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கையை மீட்டு, தனது ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. இப்போது அமெரிக்காவின் நட்பு வளையத்திற்குள் இலங்கை வந்து விட்ட நிலையில், போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதமாகவே தாக்கல் செய்யலாம் என அமெரிக்காவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கூட அடுத்த மாதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தப் போவதில்லை என்று கடந்த வாரம் இலங்கையில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கூறும் ஒரே காரணம் இலங்கையில் புதிய அரசு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான். ஆனால், இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டை இராஜபக்சேவை விட சிறிசேனா தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து இராணுவத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்ட அவர், இராணுவத்திற்கு காவல்துறை அதிகாரத்தையும் கூடுதலாக வழங்கியிருக்கிறார். மேலும் இலங்கை இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணையை    ஏற்க முடியாது என்றும், இலங்கை அரசே தனியாக விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்கும் என்று இராஜபக்சேவின் குரலையே புதிய அதிபர் சிறிசேனாவும் எதிரொலித்து வருகிறார்.இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இன்று வரையிலான காலத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க பல ஆணையங்கள் அமைக்கப்பட்ட போதிலும், ஒரே ஒரு சிங்களர் கூட தண்டிக்கப் பட்டதில்லை என்பதிலிருந்தே இவ்விஷயத்தில் இலங்கையின் அக்கறையும், நேர்மையையும் உணரலாம்.

இலங்கைப் பிரச்சினையை அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் கிட்டத்தட்ட கைகழுவி விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே உள்ளது. எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 25ஆம் தேதி மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா தான் உறுதி செய்யவேண்டும்; ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மூலம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி இராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதற்கான தீர்மானத்தையும் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாரம் இந்தியா வரும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா போர்க்குற்ற நடவடிக்கைகளிலிருந்து தமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: