அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்புச்சட்டம்? மத்திய அரசு தீவிரம்

cowடெல்லி: பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் குஜராத்தில் கொண்டுவரப்பட்ட பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களுக்குமான மாதிரிசட்டமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பசுவதையைத் தடுப்பது குறித்து அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்களை ஆராயுமாறும், பிரிவு 48ன்படி பசுவதையை தடுப்பதற்கு மாநில அரசுகள் தனித்தனியாக சட்டம் கொண்டுவரலாம் என்று கூறப்பட்டுள்ளதை பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குஜராத் அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி அதே பாணியில் சட்டம் இயற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆராயுமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத் அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று 2005ம் ஆண்டுஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உ.பி., ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச்சட்டம் அமலில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஹரியானா மாநில அரசு பசுவதைத் தடுப்புச்சட்டம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.com

TAGS: