காவிரியில் கழிவுநீர் கலப்பால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து…

Anbumani-Ramadossசென்னை: பெங்களூருவில் இருந்து வெளியாகும் கழிவு நீர் காவிரியில் கலக்கப்படுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து எழுந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரப்பகுதிகள் நச்சு பூமியாகி வருகின்றன. கர்நாடக சட்டமேலவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கதாகி, கர்நாடகத் தலைநகர் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

காவிரியை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டும் பயன்படுத்தி வந்த கர்நாடகம், இப்போது கழிவு நீரை வெளியேற்றுவதற்கான சாக்கடையாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 5 கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இத்தகைய பெருமை கொண்ட காவிரியில் கழிவு நீரைக் கலப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும்.

ஃபுளோரைடு மிகையால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் விரிவான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் தண்ணீர் எடுக்கப் படுகிறது.

cauvery-water

காவிரியில் வரும் தண்ணீர் தூய்மையாக இருந்தால் மட்டுமே இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நோக்கம் நிறைவேறும். நச்சுகள் நிறைந்த கழிவு நீர் கலந்த காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது.

ஏற்கனவே ஃபுளோரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீரைத் தருவதாகக் கூறி, நச்சு கலந்த நீரை வழங்குவது துரோகமாகும். தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரில் கழிவு நீரைக் கலக்க கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாறாக, காவிரியில் தூய்மையான தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். இதைப் பொருட்படுத்தாமல் காவிரியில் கழிவு நீரை வெளியேற்றுவது பெரும் குற்றமாகும்.

கர்நாடகத்தின் இச்செயலை கண்டிக்கவோ, உச்சநீதிமன்றத்தை அணுகி கழிவு நீர் வெளியேற்றத்தை தடுக்கவோ எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடகத்துக்கு இருக்கும் நிலையில், அதை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு அமைதி காக்கிறது.

ஆட்சிப் பொறுப்பிலுள்ள சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை காவு கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட மக்களின் நலன் கருதி காவிரியில் கழிவு நீரை திறக்கக்கூடாது என கர்நாடக அரசை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

TAGS: