திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி மற்றும் கடப்பா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டியதாக கூறப்படும் கும்பல் மீது அம்மாநில போலீசார் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் திருப்பதி மற்றும் கடப்பாவில் செம்மரக் கடத்தல் கும்பல் மீது நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் கடப்பா மாவட்டம் பந்திகோணா வனப்பகுதியில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு செம்மரக்கடத்தல் கூலி தொழிலாளர்கள் 15 பேர் இருந்தனர். அவர்களை சரண் அடையும் படி வனத்துறை போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் கூலித் தொழிலாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கோடாரியால் போலீசாரை வெட்ட முயன்றனர். உடனே போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் கடத்தல் கும்பல் சிதறி ஓடினார்கள். இதில் கர்நூலைச் சேர்ந்த ஏசு என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே கடப்பாவில் வனத்துறையினர் பறிமுதல் செய்த செம்மரங்களை கடத்தல் கும்பலுக்கு மீண்டும் விற்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.