ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக மேலும் 21 தமிழர்கள் கைது

semmaramநெல்லூர் : செம்மரம் வெட்டிக் கடத்தியதாக மேலும் 21 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சேலத்தை அடுத்த கன்னமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில், ஆந்திர போலீசார் அவ்வப்போது செம்மரம் வெட்டி கடத்தியதாக பலரை கைதுசெய்து அவர்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி வருகிறது.

இதில் அப்பாவித் தமிழர்களும் சிக்க வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திர போலீசார் 43 தமிழர்களை கைது செய்தனர்.

அப்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது பலர் தப்பி ஓடிவிட்டதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில், செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 21 பேரை கைது செய்தனர். அவர்கள் சேலத்தை அடுத்த கன்னமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: