புண்ணிய நதியை அழித்த புண்ணியவான்கள்!

floodசென்னையில் நதிகள் என்ற பெயரில் இரண்டு சாக்கடை ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் அடையாற்றை கண்டு சைதாப்பேட்டை அரண்டு போனதென்றால், மறுபுறத்தில் கூவத்தின் வேகம் அமைந்தகரை,சிந்தாதரிப்பேட்டையை மிரட்டி எடுத்தது.

சென்னையின் மக்கள் பெருக்கம் கூவம் என்ற நதியை கழிவுநீர் சுமந்து செல்லும் ஆறாக மாற்றி விட்டது. ஆனால் இந்த நதிக் கென்று பெருமை மிக்க வரலாறு உண்டு.

நதிகள் என்பது அந்த பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணி பிணைந்தவை. காவேரி இல்லாத டெல்டா மாவட்டங்களை யோசித்து பார்க்க முடியாது. தாமிரபரணி இல்லாத நெல்லை சீமை கிடையாது. நதிகளின் ஓட்டத்துடன்தான் அந்த அந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை செழுமையுடன் அமைந்திருந்தது.
ஆற்றையொட்டி கோவில்கள் எழுந்தன. கலைகள் வளர்ந்தன. நாகரீகம் செழித்தன. நதிகளை உருவாக்கும் வனங்கள், மலைகள்,கடல்கள் இல்லாத மனித வாழ்க்கை எப்படி சிறப்பாக இருக்க முடியும்? இதையெல்லாம் தெளிவாக அறிந்திருந்தும் கண்ணெதிரே கூவம் என்ற நதியை கொன்று விட்டு, இப்போது கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம்?

சென்னையில் இருந்து 72 கி.மீ. தொலைவில் அரக்கோணம் அருகே, தக்கோலம் என்ற கிராமத்தில் உள்ள கேசவரம் அணைக்கட்டில் கூவம் நதி உருவாகிறது. இந்த நதி 82 பாசன குளங்கள், 13,575,93 ஹெக்டேர் ஆயக்கட்டு பகுதியை கொண்டது.

கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. நதிகளையொட்டி கோவில்கள் எழுந்ததற்கு அடையாளமாக கூவத்தின் கரையில்,இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம் மற்றும் திருவேற்காடு ஆகிய பாடல்பெற்ற தலங்களும், எழுமூர் மற்றும் நெற்குன்றம் ஆகிய வைப்புத் தலங்களும் உள்ளன. இதனால் காவிரி, தாமிரபரணி நதிகளின் பெருமைக்கு கூவம் நதியும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.

கூவத்தின் பாதையில் ஆரண்வயல் அணை , கொரட்டூர் அணை உள்ளிட்ட 6 அணைகள் கட்டப்பட்டுள்ளன. கூவத்தில் தூய நீர் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் மீன் பிடி தொழிலும் சிறப்பாக நடந்துள்ளது. படகுப் போட்டிகளும் நடைபெற்றன. மொத்தம் 65 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த நதிக்கு சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் நுழையும்போது சோதனை ஆரம்பிக்கிறது. கழிவுகள் மொத்தமும் இந்த கூவத்தில் இணையத் தொடங்குகின்றன. கூவத்தின் இயல்பு மாறத் தொடங்குகிறது.

சென்னைக்குள் மட்டும் கிட்டத்தட்ட 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூவம் பயணிக்கிறது. லஸ் பாலத்தின் அருகே இரண்டாக பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தின் கீழே ஒன்றாக இணைகிறது. அந்த இடத்தில்தான் தீவுத் திடல் உருவாகியுள்ளது. கூவம் மட்டும் தெளிந்த நீர் ஓடும் நதியாக இருந்திருந்தால், தீவுத்திடலை சுற்றி படகுகள் சென்று கொண்டிருந்தால், அதன் அழகை கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அது மாறியிருக்கும்.

கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் முதன் முதலாக கடந்த 1971-இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்புகளும் குறைவாக இருந்தது. இதனால் இது சாத்தியமாக தோன்றியது. ஆனால் 1976-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய புயலால் கூவம் நதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கான அமைப்புகளும் தகர்ந்து விட்டன. அத்துடன் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதற்கு பிறகு மாறி மாறி வந்த கழக அரசுகள், ‘கூவத்தை தூய்மைப்படுத்துவோம்… தூய்மைப்படுத்துவோம்’ என்று கூவுவதோடு சரி. ஆனால் எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தியதில்லை. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையில் இருந்து கூவம் கடலில் வந்து சேரும் இடம் வரை, 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு நதியை தூய்மைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டது. ஏற்கெனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூவம் தூய்மைப்படுத்தும் திட்டத்தில், சில மாற்றங்களுடன் 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தற்போதைய அரசு செயல்படுத்த முன்வந்தது.

இப்படி மாறி மாறி வரும் கழக அரசுகள் கூவத்தை சுத்தப்படுத்த பலத் திட்டங்கள் போடுகின்றன. ஆனால் கூவத்தை பொறுத்தவரை இது வரை எந்த திட்டமும் முழுமையாக வெற்றியடையவில்லை. அது இன்னமும் அப்படியேதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் பயணிக்கும் போல.
புண்ணிய நதியின் பெயருக்கே வேறு அர்த்தத்தை கொடுத்த பெருமையுடன் சென்னையும் வாழ்ந்து கொண்டிருக்கும்!

-http://www.tamilwin.com

TAGS: