நிவாரண பணி… மத்திய-மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பே இல்லை: சீமான் பாய்ச்சல்

seeman-floodசென்னை: மழை வெள்ளத்திற்கு முன்பு மட்டுமல்ல வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்குப் பிறகும் கூட இந்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை வேளச்சேரி மற்றும் செங்கல்பட்டு பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிவாரண உதவிகளை வழங்கினார். அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மழையால் மட்டும் இவ்வளவு பெரியப் பாதிப்பு ஏற்படவில்லை; ஏரிகளில் வரைமுறை இல்லாமல் நீரை திறந்து விட்டதும்தான் இவ்வளவு பெரிய இழப்பிற்கு முழுக்காரணம். படிப்படியாக நீரை திறந்து விட்டு இருந்தால் இந்த அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருக்காது. குறைந்தது முன்னறிவிப்பு செய்துவிட்டாவது நீரை திறந்துவிட்டு இருக்கலாம்.

இவ்வளவு பெரிய கவனக்குறைவான செயலை பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டசபையைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும் மற்றும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் என்ன நடந்தது? யார் ஏரியை திறந்தது? இது முதல்வருக்கு தெரியுமா ? தெரியாதா? என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

சென்னை மாநகராட்சி முழுக்கக் குப்பைகளாக நிறைந்து கிடக்கிறது, சென்னை மாநகராட்சிக்குத் தேவையான பணியாளர்களே இல்லை. எங்கு பார்த்தாலும் மற்ற மாநகராட்சி ஊழியர்கள்தான் வேலை செய்கிறார்கள். நாம் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்படி நிர்வாகம் மோசமாக இருந்தால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவோம்.

மாமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு நேரில் சென்று உதவுங்கள் என்று ஒரு அறிக்கை கூட மாநில அரசானது விடவில்லை. பிறகு, இங்கு எங்கே இருக்கிறது ஒருங்கிணைப்பு?

மழை வெள்ளத்திற்கு முன்பு மட்டுமல்ல வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்குப் பிறகும் கூட இந்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இங்கே தமிழகத்தில் இலட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இங்கே ஒரு 50 ஆயிரம் கோடி அறிவித்து மக்களுக்கு சேவை செய்ய முன்வராத மத்திய அரசு, புல்லட் ரயில் விட 98 ஆயிரம் கோடி அறிவித்துள்ளது. இதை சிறிதுகாலம் கழித்து அறிவிக்கக்கூடாதா?. அப்படியென்றால், தமிழக மக்களை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம்?

கேரளா மற்றும் கர்நாடக அரசு எப்போதுமே அந்த மாநில மக்களுக்காகத்தான் பேசும். அந்த அடிப்படையில்தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி பேசுகிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என எந்தக்கட்சி ஆண்டாலும் அது அந்த மாநில கட்சியாகத்தான் செயல்படும்; தேசிய கட்சியாக ஒருபோதும் செயல்படாது. அதுபோல தமிழக அரசும் தமிழகத்தின் வளங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று அறிவித்தால்தான் இதற்கு முடிவு வரும்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-http://tamil.oneindia.com

TAGS: