ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம் திறக்கப்படும்: தருண்விஜய் தகவல்

tarun vijayசென்னை: ஹரித்துவாரில் பிப்ரவரி மாதத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் சென்னையில் தெரிவித்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சேவாபாரதி அலுவலகத்திற்கு நேற்று மாலை பாஜக எம்.பி. தருண் விஜய் வருகை தந்தார். அவரை சேவாபாரதி நிர்வாகிகள் வரவேற்றனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, விரைவாக செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட சேவா பாரதி நிர்வாகிகளை தருண்விஜய் பாராட்டினார்.

பின்னர் நிவாரண பணிக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அவர் அறிவித்தார். நிருபர்களிடம் தருண் விஜய் கூறியதாவது:

வரலாறு காணாத மழையால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியது பாராட்டுக்குரியது. தமிழக மக்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

வெள்ள நிவாரண உதவியாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கி இருக்கிறேன். நிவாரண பணி மற்றும் கட்டிட பணிக்காக சேவாபாரதியிடம் ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன்.

மனிதவள மேம்பாட்டு துறை மூலம் திருக்குறளை மொழியாக்கம் செய்து சர்வதேச அளவில் பரப்ப நடவடிக்கை மேற்கொள்வேன். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை பிப்ரவரி மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

tamil.oneindia.com

TAGS: