ஜல்லிக்கட்டுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்… கடும் கொந்தளிப்பில் தென்மாவட்ட மக்கள்!!

jalliமதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தென்மாவட்டங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன பாலமேட்டில் கிராம மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடி ஏந்தி பேருந்து நிலையத்தி்ல் இருந்து வாடிவாசல் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆவேசத்துடன் கூறினர். நாங்கள் அமைதி வழியில் போராடி வருகிறோம். நேதாஜி வழியை கையில் எடுத்தால் யாராலும் தாங்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த கடந்த 12ம்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்து வந்தவர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வருகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் பதற்றம்

ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டதை அடுத்து இதன் காரணமாக மதுரை மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

வாடிவாசல்களில் பதற்றம்

ஜல்லிக்கட்டை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள், செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் போன்றவை நடந்தன.

இதனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அவனியாபுரத்தில் சூடம்

அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து முழக்கம் எழுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முழக்கமிட்டபடி வாடிவாசல் வந்த மாடுபிடி வீரர்கள் சூடம் ஏற்றி சூரியனை வழிப்பட்டனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததை கண்டித்து வீரர்கள் முழக்கம் எழுப்பினர்.

தொடரும் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனே நீக்க வேண்டும், மத்திய-மாநில அரசுகள் அவசர சட்டத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாலமேட்டில் பேரணி

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடி ஏந்தி பேருந்து நிலையத்தி்ல் இருந்து வாடிவாசல் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், முகத்தில் கருப்பு துணி கட்டிக் கொண்டும் தங்ளது எதிர்ப்பை தெரிவித்தனர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அமைதி போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.

ஆனால் எங்களை ஏமாற்றிவிட்டனர். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆவேசத்துடன் கூறினர். நாங்கள் அமைதி வழியில் போராடி வருகிறோம். நேதாஜி வழியை கையில் எடுத்தால் யாராலும் தாங்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர். போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுசெயலாளர் கைது

பழனியில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுசெயலாளர் ராம.ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புறப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

களையிழந்த பண்டிகை

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. பாலமேடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலை தொடர்பு கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்த யோகராஜ் என்பவர், மின்சார வாரியத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்.

யோகராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்த போலீசார், பின்னர் அவரை கைது செய்ய முயன்றனர். இதனால், காவல்துறையினருக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீட்டா அமைப்பை கண்டித்து போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டிற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காளை மாடுகளுடன் காவல்நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

tamil.oneindia.com

TAGS: