புதிய தலைமுறை சர்வே: தேமுதிகவை பின்னுக்குத் தள்ளும் பாமக, நாம் தமிழர்!

seeman-3443சென்னை: புதிய தலைமுறை நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளை சற்று உற்றுப் பார்த்தால் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடியும். தனித் தனியாக கட்சிகளைப் பிரித்துப் பாரத்தால் இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் வருகின்றன. வரும் சட்டசபைத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு கருத்துக் கணிப்பை நடத்தி நேற்று முடிவை வெளியிட்டது புதிய தலைமுறை. இதில் வந்துள்ள முடிவுகள் சில எதிர்பார்த்தவைதான். சில எதிர்பாராதாவை. எதிர்பாராதது வரிசையில் முக்கியமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு. பலரும் இந்தக் கட்சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்ற ஊகத்தில் இருந்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் தலை தூக்கியுள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது. உண்மையில் நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு ஒளிபரப்பானபோது அதில் பேசியவர்கள் மற்றவை என்பதில் நாம் தமிழர் கட்சி முக்கியமாக உள்ளதாக லேசுபாசாக தெரிவித்தனர். ஆனால் பகிரங்கமாக அக்கட்சியின் நிலையை தெரிவிக்கவில்லை. ஆனால் புதிய தலைமுறை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

உங்கள் வாக்கு யாருக்கு என்று ஒரு கேள்வி. இதில் அதிமுக முதலிடத்தையும், திமுக 2வது இடத்தையும் பிடித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி அதாவது தேமுதிக தலைமையிலான அணி 3வது இடத்தில் உள்ளது. பாமகவுக்கு நான்காவது இடம், இதுவரை குழப்பம் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். ஆனால் நாம் தமிழர் கட்சி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அதை விட முக்கியமாக பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. பாஜகவுக்கு 6வது இடம்தான் கிடைத்துள்ளது.

இதில் கட்சிகள் அடிப்படையில் பிரித்துப் பார்த்தால் நாம் தமிழர் 4வது சாய்ஸாக மக்கள் மத்தியில் இருப்பதை அறிய முடியும். திமுக, அதிமுகவை விட்டு விடுவோம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவு 8.55 சதவீதம். பாமகவின் ஆதரவு 4.47 சதவீதம். நாம் தமிழருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 2.12.

naam tamilarதேமுதிக கூட்டணியில் மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. சராசரியாகப் பார்த்தால் அக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் 1.45 சதவீத ஆதரவு வருகிறது. அப்படிப் பார்க்கும்போது சதவீத அடிப்படையில் பாமகதான் 3வது சக்தியாக உள்ளது. 4வது இடம் நாம் தமிழருக்கு. தேமுதிக உள்ளிட்டோருக்கு அதற்கு அடுத்த இடம்தான்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் தைரியமாக தனித்துப் போட்டியிடுவது பாமகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களது சொந்த செல்வாக்கை அறிய இந்த கருத்துக் கணிப்புகள் உதவும்.

மேலும் தெற்கு, மேற்கு மண்டலங்களில் நான்காவது பெரிய கட்சியாக நாம் தமிழருக்கு ஆதரவு காணப்படுகிறது. இது குறிப்பிடத்தக்கது. பிற மண்டலங்களிலும் கூட இதன் தாக்கம் தெரிகிறது.

சீமானின் கருத்துக்கள் தீவிரமாக இருந்தாலும், முரட்டுத்தனம் இருந்தாலும் கூட அவர் மக்களிடையே நன்கு ரீச் ஆகியுள்ளார் என்பதையும் இந்தக் கருத்துக்கணிப்பு புலப்படுத்துகிறது. வரும் நாட்களில் சற்று சீரிய வகையில் உறுதியுடன், தெளிவாக செயல்படும்போது நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

தற்போதைய நிலையில் பாமகவுக்கு அடுத்த இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதே மிகப் பெரிய சாதனைதான். இது முதல் தேர்தல் என்பதாலும், இப்போதுதான் அலை ஏற்படுத்தி வருகிறது என்பதாலும் இந்தத் தேர்தலை தனது நிலையை பரீட்சித்துப் பார்க்க நாம் தமிழர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

-http://tamil.oneindia.com

TAGS: