தேமுதிகவை கலைத்துவிடுங்கள்: விஜயகாந்துக்கு 14 மா.செ.க்கள் கதறல் கடிதம்

vijayakanthதேமுதிகவை கலைத்துவிட்டு தங்களை பிழைக்கவிடுமாறு அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலர்கள் எழுதிய பகிரங்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியை தழுவியது. கூட்டணி விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினர்.

இதனிடையே தற்போது 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளனர்.

அவர்கள் விஜயகாந்துக்கு அனுப்பிய பகிரங்க கடித விவரம்: உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும் யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம் தே.மு.தி.க. பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தே.மு.தி.க. இருக்கிறது.

2005-ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். கடந்த 11 ஆண்டில் தே.மு.தி.க. என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நாங்களும் எதிர்த்தோம்.

2016ல் வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைத்த கதையாக தி.மு.க.வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது?

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம்.

என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்களா.

தே.மு.தி.க. கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை. ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது.

உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா, அதன் விளைவு 10.5 சதவீதம் இருந்த வாக்கு 2.5 சதவீதமாகி போனது.

தி.மு.க. நம்மால் தோற்று விட்டதல்லவா, தி.மு.க.வால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளராக தே.மு.தி.க.வில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க. கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: