நாசமாய்ப் போன தமிழ்நாடு… தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே.. சுப. உதயகுமார் உருக்கம்

udayakumarநாகர்கோவில்: கரூரில் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா என பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கின்றார்களோ என்று தெரியவில்லை. என்னதான் நடக்கிறது இந்த நாசமாய்ப் போன தமிழ்நாட்டில் என்று பச்சை தமிழகம் கட்சி நிறுவனரும், கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வேதனையுடந் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சுப. உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வரோ, அமைச்சர்களோ, மூத்த அதிகாரிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டு கொள்வதே இல்லை. அதுகுறித்து பேசுவதும் இல்லை.

சட்டமன்றத்தில் தங்கள் தலைவிக்குப் புகழாரம் சூட்டுவதும், வீணாகப் பேசுவதும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதும்தான் நடக்கிறது.

யாரை காட்டினாலும் தங்களுக்கு பணம் வரும் என்று சிந்தித்தே சினிமாக்காரர்களும், தொலைக்காட்சி நிறுவனத்தவரும் செயல்பட்டு வருகின்றனர்.

கல்லூரிகளில், பள்ளிகளில் பிள்ளைகளை வெறும் இருக்கைகளாக மட்டுமே பள்ளி நிர்வாகத்தினர் பார்க்கப்படுகின்றனர். மாணவர்களிடம் இருந்து பணம் பறிப்பதும், அவர்களின் தேவைகளை முழுக்கப் புறக்கணிப்பதும்தான் பள்ளி நிர்வாகத்தின் வேலையாக இருக்கிறது. அவை அவர்களின் வாழ்க்கைக்கு உதவாத கல்வியைக் கொடுத்து, வியாபாரத்திற்கு துணை போகின்றன மதிப்பெண் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்து வருகின்றன.

தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானவர்களை பாதுகாப்பதும், வேண்டாதவர்களுக்கு எதிராக கதை வசனம் எழுதுவதும்தான் காவல்துறையினரின் வேலையாக உள்ளது.

பெரும் முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பாவம், நமது மகன்களுக்கு வழிகாட்டுவாரில்லை. நமது மகள்களுக்கு பாதுகாப்பே இல்லை. என்ன செய்வது? தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே! இவ்வாறு சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: