கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தானை கதற வைக்கும் இந்தியா! இன்னும் இருக்கு அதிரடி

modi-nawazடெல்லி: யூரியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது ஏன்டா தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என மூலையில் உட்கார்ந்து வருந்தும் நிலைக்கு வந்துள்ளது பாகிஸ்தான். அதன் முதல் அடிதான் சார்க் மாநாடு ரத்தாகியுள்ளது. சர்வதேச சமூகத்தின் முன்பு குற்றவாளியாக கூனி குறுகி நிற்க வைக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். யூரியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டதும் கொதித்தெழுந்தது இந்தியா. ராணுவம் மூலம் பதிலடி தர வேண்டும் என்பதே பல தரப்பு கோரிக்கையாக இருந்தது.

ஆனால், ஆலோசித்து பார்த்த மத்திய அரசு, இது சற்று தவறினாலும் இந்தியாவுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் விவகாரம் என்பதை உணர்ந்தது. இந்தியா தற்போது சீனாவுக்கு ஈடாக பொருளாதாரத்திலும், உற்பத்தி துறையிலும் முன்னுக்கு வந்துகொண்டுள்ளது. இந்த நேரத்தில் போர் தொடுக்கப்போய், சர்வதேச சமூகம் இந்தியா மீது பொருளாதார தடையை விதித்தால் நிலைமை விபரீதமாகும் என்பதை உணர்ந்த இந்திய அரசு, ராஜதந்திர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இதன் முதல் கட்டம்தான், சிந்து நதி ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அந்த நாட்டின் பெரும்பான்மை பகுதியை பாலைவனமாக மாற்றி பொருளாதாரத்தை சிதைக்கும் திட்டம். அடுத்தகட்டமாக பாகிஸ்தானை இந்தியாவின், சாதகமான நாடு என்ற பட்டியலில் இருந்து கழற்றிவிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம், பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் அடி விழும். நாளை இதுகுறித்து முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது மத்திய அரசு.

மற்றொருபக்கம், சார்க் நாடுகளில் பங்கேற்பதில்லை என இந்தியா அறிவித்தது. நமக்கு பக்கபலமாக பல நாடுகளும் அணி திரளும் என இந்தியா எதிர்பார்த்தது. இந்தியாவின் நட்பு நாடான வங்கதேசமும், ஆப்கானிஸ்தானும், அதையே செய்தன. பெரிய அண்ணன், இந்தியாவின் தயவு வேண்டும் என்பதற்காக பூடானும் விலகிக்கொண்டுள்ளது. நேபாளமும் விரைவில் இதையே செய்யப்போகிறது. சார்க் மாநாட்டை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான்.

இப்படி அண்டை நாடுகளே, காறி துப்பும் அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்து வைத்துள்ளதே பாகிஸ்தான் என்ற எண்ணம் இப்போது உலக நாடுகளுக்கு வந்திருக்கும். இதைத்தான் இந்தியாவும் எதிர்பார்க்கிறது. ஏன்டா இந்திய ராணுவத்தினர் மீது கை வைத்தோம் என பாகிஸ்தான் நினைத்து புழுங்கும் காலத்தை நோக்கி காய் நகர்த்திக்கொண்டே இருக்கிறது இந்திய அரசு. அதுவும் பாகிஸ்தானே எதிர்பார்க்காத பயங்கர வேகத்தில்.

tamil.oneindia.com

TAGS: