அப்பல்லோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா?

இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார்.

அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ.

அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்து நிபுணத்துவம் பெற்ற பல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த அக்டொபர் 10ல் ஜெ., நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்க வேண்டும் என்ற செய்தியுடன் தனது அறிக்கைப் படலத்தைத் தற்காலிகமாக முடித்துக்கொண்டது அப்போலோ.

நீண்ட நாட்கள் என்பது எத்தனை நாள் என இறுதி செய்யப்படாத நிலையில் முதல்வரது அப்போலோ வாசம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதல்வருக்கு உடலில் இதுதான் சிக்கல் என்று இன்றளவும் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

முதல்வருக்கு நுரையீரல் வீக்கமா?

இந்நிலையில் ஜெ. வின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உட்கார்ந்திருக்கிறார். மயக்க நிலையில் வைத்திருக்க மருந்துகள் எதுவும் தரப்படவில்லை, இது அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்கிற தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன.

மேலும் அவர் நுரையீரல் நீர் வீக்கத்திற்காகத்தான் மருத்துவமனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்துவருகிறார்.

தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு, மருந்தின் அளவுகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளதால்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவர்கள் வட்டாரமே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

– Vikatan

TAGS: